*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, June 26, 2011

தமிழ்மண நட்சத்திரமும் நன்றியும்.


மிகவும் சந்தோஷம்.அதேநேரம் தூக்கம் குறைவு.சாப்பாடு இல்லை இப்பிடியே இந்த வாரம் போச்சு.ஆனா மனசுக்கு நிறைவா எனக்கு முடிஞ்சதை எழுதிருக்கேன்னு நினைக்கிறேன்.தொடர் பதிவானதால உங்களுக்கும் கொஞ்சம் என்னால கரைச்சல்தான்.அப்பிடியிருந்தாலும் அலுக்காம வந்து என்னை உற்சாகப்படுத்தின எல்லாருக்கும்......எல்லாருக்கும் அப்புறம் வந்தும் பின்னூட்டம் போடாம ஒளிஞ்சிருந்து பார்த்த எல்லாருக்குமே நன்றி நன்றி நன்றி.

என்னை ஊக்கப்படுத்திய தமிழ்மணத்திற்கும் மனதார நன்றி சொல்லிக்கொள்கிறேன்.நகைச்சுவைப் பதிவு எழுதவே வராது.எப்படியாவது ஒரு நகைச்சுவப்பதிவு போட்டேயாகவேணும் என்கிற எண்ணத்தில்தான் "கள்ளக்கோழி" என்கிற பதிவு மிகவும் கஸ்டப்பட்டு எழுதினேன்.எழுத வைத்த தமிழ்மணத்திற்கு மீண்டும் நன்றி.இதில் என்னை உசுப்பேத்திவிட்டது நிரூவும் வடையண்ணாவும்.

முதல் நாளிலிருந்து காதல்,ஈழம்,இயற்கை,சமூகம்,நகைச்சுவையெனத் பலதையும் தொட்டு எழுதியிருக்கிறேன்.நட்சத்திரப்பதிவு இன்றோடு நிறைவாகிறது.என்றாலும் என் மனதில் தெறிப்பவைகள் இனியும் எழுத்துக்களாக எண்ணங்களாகத் தொடர்ந்தும் பதிந்துகொண்டுதானிருக்கும்.

இன்று இறுதி நாள் நடசத்திரப்பதிவுக்கு.அவசரமாக இன்று இரவு வீட்டிலிருந்து நன்றி சொல்லிப் பதிவு போடமுடியாததால் விரிவான பதிவாக எழுதமுடிதாமைக்கு வருந்தி இப்போதே நன்றி சொல்லிக்கொள்கிறேன்.ராமலக்ஷ்மி அக்கா முதன்முதல் வாழ்த்து உங்களிடமிருந்தே கிடைத்தது.மனதிற்கு நிறைவாய் நட்சத்திர வாரத்தை நிறைவாக்கி வைக்கிறேன்.மிக்க நன்றி உங்களுக்கு முதலில்.

வேலை மிகுதிக்குள்ளும் எனக்கு ஒவ்வொரு நாளும் வந்து ஓட்டும் போட்டு ஊக்கப்படுத்தியவர்கள் எல்லாருமே என் உறவுகள்.என் நண்பர்கள்.இத்தனை பேரும் என் நண்பர்களா என்று நினைக்கையில் மிகவும் சந்தோஷமாய் உணர்கிறேன்.இன்னும் நிறையப்பேர் தனிப்படவும் பாராட்டினார்கள்.இன்னும் சிலர் பார்த்து ரசித்ததோடு சரி.ஒரு வார்த்தை வாழ்த்தியிருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன்.ஏதோ ஒரு குறையும் இருக்கவேணும்தானே.ஒருசிலரை மிகவும் எதிர்பார்த்திருந்தேன்.பரவாயில்லை.எப்போதும் என் உறவுகள்தான் அவர்களும்.

ராமலஷ்மி அக்கா,மேவீ,கலாநேசன்,பலாபட்டறை ஷங்கர்,ஸ்ரீராம்,மைந்தன் சிவா,றமேஸ், ஜோதிஜி,தமிழரசி,நண்டு நொரண்டு,அப்பாஜி அப்பாதுரை,ரதி,ராதாகிருஷ்ணன் ஐயா,காஞ்சனா அம்மா,தமிழ் உதயம்,ரிஷபன்,சமுத்ரா,தவறு,ஆர்.வி.எஸ்,நேசன், சங்கவி,நசரேயன்,சி.பி.செந்தில்குமார்,வேடந்தாங்கல் கருன்,வந்தியத்தேவன், விடிவெள்ளி செண்பகம்,ரியாஸ்,அத்திரி,அம்பிகா,புலவர் ராமாநுசம்,சிநேகிதன் அக்பர், ராஜநடராஜன்,கலா,பாலாஜி,ஜமால்,ஆயில்யன்,உழவன்,கவிதை சௌந்தர்,நிரூபன், மாலதி,திகழ்,ஓட்டைவடை நாராயணன்,கானா பிரபா,ஏஞ்சல்,அன்புடன் அருணா,ஷர்புதீன், சந்ரு,கந்தசாமி,தூயவன்,தமிழன் கறுப்பி,சத்ரியன்,சுந்தரா,மாதேவி,பிரியமுடன் வசந்த், இரா எட்வின்,மீனு,நாஞ்சில் மனோ,விக்கியுலகம்,நிலாமகள்,தினேஸ்குமார்,அரசன், சுந்தர்ஜி,போளூர் தயாநிதி,இராஜேஸ்வரி,செ.சரவணகுமார்,
ஜெரி ஈசானந்தா,தமிழ்ப்பறவை,மதுரை சரவணன்,அம்மாபொண்ணு,நடராசா குணபாலன், தாராபுரத்தான் ஐயா,சே.குமார்,வேலு ஜீ,துஷ்யந்தன்,சிப்பிக்குள் முத்து,அஷோக்,ரத்னவேல் ஐயா,கௌசல்யா,நெடுங்கேணியூர் குமரனார்,முனைவர் இரா குணசீலன்,கவி அழகன், பாரா அண்ணா,மல்லிக்கா,தேனக்கா,இக்பால் செல்வன்,அமைதிச்சாரல்,சிவகுமாரன்,ஜீ, கருணாகரசு,,கார்த்திக் சிதம்பரம்,பிரபு,மோகண்ணா,நேசமித்ரன்,கூடல்பாலா,மகன் தமேஷ், எல்.கே கார்த்திக்,குணசேகரன்,ஜெயம்.......

இன்னும் இன்னும் எல்லாருக்கும் காற்றலையில் கை கோர்த்த என் உறவின் அத்தனை உள்ளங்களுக்கும் நன்றியும் சந்தோஷமும் !

அன்போடும் நட்போடும் அன்பின் ஹேமா.

இருட்டான சூரியன்...

 

நடுநிசி இரவிலும்
பச்சை மஞ்சள் சிவப்பு விளக்குகளின்
சமிக்ஞைக்காகக் காத்திருக்கும்
வாகனமாய் நான்.
உனக்காக
நிற்கிறேன்
கவனிக்கிறேன்
தொடர்ந்தும்
காதலித்துக்கொண்டே
இறப்பேன்!


எந்த மாதிரியும்
என்னை அலட்சியப்படுத்த
நீ...
துணிந்தே இருக்கிறாய்
பரவாயில்லை விடு
உன்...
முத்த ஒப்பந்தத்திற்காகவே
காத்திருக்கும்
காலம் முழுதும்
என் கன்னம் !


எம் கையில் எதுவுமில்லையென்றேன்
"கையில் ரேகைகூடவா இல்லை"
கிண்டலாய்
சொன்னாய் சிரித்தபடி
நீ பிரிந்தபோதுதான் புரிந்தது
அதிஷ்டமில்லா
வெற்றுரேகையென !


எத்தனை பேசியிருந்தாலும்
காற்றில் கலந்த முத்தங்கள்
இன்னும்...
சில வேறு தவிர
தேடிப்பார்
மிஞ்சியிருப்பது
நான்...நீ
மிச்சம் மிகுதியாய்
நினைவுகள்
போதாதா
சாகும்வரை இது !


செத்துக்கொண்டே இருக்கிறேன்
பேச்சுக்களற்ற பூமியில்
உன்னைச் சந்திக்கிறேன்
இடைவெளி நிரப்பு
மிச்சமிருக்கும் சுவாசமெடு
பிச்சையாய்
ஒற்றை ஈரமுத்தமிடு
இனாமாய் என் உயிரெடு
உயிர்ப்பிக்க அல்ல
இப்போதெல்லாம்
உன்...
உதட்டில் விஷம்!


'கல்லுளி மங்கன்' என்றாய்
இல்லையென்றேன்
நம்பவுமில்லை
கல்லுக்கு
பால் வார்த்திருந்தாலாவது
குடித்து மிஞ்சியதும்
கக்கியிருக்குமோ
அன்பின் மிகுதியை!


தள்ளித் திறந்து வந்தது நீ
தள்ளிவிட்டுப் போனதும் நீ
கதவும் வாசலும்
காவலும் காத்தலுமாய்
நான் இப்போ!


செத்தே வாழ்வதின்
வித்தை தெரியுமா....
உணர்ந்து பார்
உயிரோடு
செத்துகொண்டிருப்பாய் !

ஹேமா(சுவிஸ்)

Saturday, June 25, 2011

பெண்ணாய் நான்...

தலைமுறை தலைமுறையாய்
தாழ்வாரத்திலும்
வீட்டு முகட்டிலும்
கட்டித்
தொங்கும் மூட்டைகளை
ஒற்றை இரவில்
அவிழ்த்தெறிவது
முடியுமான காரியமில்லை எனக்கு.

முட்டிகளை உடைத்தும்
தலைமுடிகளை அறுத்தும்
நிர்வாணங்களை
அம்பலப்படுத்தியுமான வலிகள்
எங்கள் வளவுகளில்
(காணி)
நிறையவே.

காலத்தின் விந்துகள்
கடல் கடந்து
கலய அடுக்குகள் மாறியபோதும்
உட்சுவர்கள் மாறாமலேயே.

ஒவ்வொன்றும் இறுக்கமாய்
சிலவற்றைத் தளர்த்தியபோதும்
தளர்த்த முயலும் விரல்களுக்குள்
இன்னும் இன்னும்
இறுக்கமாய் இருக்கும்
கோட்பாடுகளும் கலாசாரங்களும்.

தலைமுறை தலைமுறையாய்
கட்டி வைத்த மூட்டை முடிச்சுகளை
அவிழ்க்கவே முடியாமல்
சமூக விலங்குகளோடு நான்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, June 24, 2011

கள்ளக் கோழி...

இஞ்சாரப்பா கவனிச்சியே ஒரு சிவப்பு பெட்டைக் கோழியொண்டு இஞ்சனேக்க எப்பவும் உலாவுது.அது ஆரிண்ட கோழியப்பா.தெரியுமே உனக்கு.

ஓமப்பா நானும் ஒவ்வொருநாளும் பாக்கிறன் எங்கட வளவுக்கதான் எங்கட கோழிகளோட திரியுது.இங்கதான் மரத்தில இரவிலயும் படுக்குதுபோல.ஆரும் இடம் பெயர்ந்து
போனவையின்ரயோ தெரியேல்ல.எதுக்கு இந்தக் கிழமையும் பாப்பம்.
ஏனப்பா பிடிச்சுக்கொண்டுப்போய் அம்மா வீட்டை கொண்டு போய் விடுவமே.கொஞ்சம் வளந்தாப்போல கொண்டுவரலாம்....சரியே.

என்னப்பா நீ்.....நான் மனசில வேற கணக்குப்போட்டு வச்சிருக்கிறன்.துணிபோட்டுப் பிடிச்சுச் சட்டிக்க வைக்கவெண்டு.........நீ என்னடாவெண்டா...!

சும்மாயிருங்கோப்பா.அது நல்லசாதிப் பேடுபோல இருக்கு. வளர்ந்து முட்டை போட்டா...பக்கது வீட்ல நல்ல வெள்ளடியன் சேவல்வேற நிக்குது ...பிறகு அடை வச்சுக் குஞ்சு பொரிக்குமெண்டு நான் கற்பனை பண்றன்.

அடி விசரி நீயும் உன்ர கோழிக்கனவும்....!

நீங்கள் பாருங்கோவன் ஒருநாளைக்கு எங்கட வீட்ல வெள்ளடிச் சாவல்ன்ர பமிலியே இருக்கும்.ஆசையா அடை வைக்க நான் ஒரு முட்டை கேக்கக்கூட உவள் சுமதி தரமாட்டன் எண்டவளெல்லே.

என்னவாலும் செய்து துலை. இங்க ஆராச்சும் படலை திறந்து வம்பு சண்டைக்கு வராம இருந்தாச் சரி.எப்பதான் நான் சொன்னதைக் கேட்டிருக்கிற நீ.நான் உன்னைக் கட்டி...உன்ர கொப்பருக்கு உதைக்கவேணும்.பாவம் வயசு போட்டுது எண்டுதான் பேசாமலிருக்கிறன்.இல்லாட்டி....

இல்லாட்டி இல்லாட்டி....கோழி பிடிக்கிறதுக்கும் அப்பருக்கும் ஏன் முடி போடுறியள் இப்ப...

அடி போடி கொப்பரை உதச்சு எதுக்கு.கள்ளக்கோழி அமத்திற
ஆக்கள்தானே நீங்கள்.....சரி சரி விடு !


இரண்டு மாசம் போனபிறகு....


ஏனப்பா ஆரெண்டாலும் தேடினவையே அந்தச் சிவப்பியை.சரியப்பா இண்டைக்குப் போய் அவள் சிவப்பியைக் கொண்டு வந்து விடுவமே.எதுக்கும் வேற கலர் பெயிண்ட் அடிச்சுக் கொண்டு வந்து விடுவமேப்பா.

நாசமாப் போக நீ.ஏன் அதைச் சாகடிக்கச் சொல்றியே.அதுக்குத்தானே அண்டைக்கே
சொன்னனான் சட்டிக்க வைப்பமெண்டு.

ஏனப்பா பெயிண்ட் அடிச்சா என்ன.எங்கட புதுக்கோழியெண்டு
சொல்லலாமெல்லோ.உங்களுக்கு அறிவே இல்லையப்பா....

ஓமடி....ஓமடி உனக்கு நிறைஞ்சு வழியுது அறிவு.சும்மா கலர் அடிச்சா மழையில கழுவுப்பட்டுப் போகாதே.சரி கழுப்படாத பெயிண்ட் எண்டா கோழியிண்ட றெக்கை (இறகு) ஒட்டிக்கொள்ளுமெல்லே.

ஓம் எனக்கு விசர்தான்.எனக்கு யோசிக்க வரேல்லத்தானப்பா.சரி பின்னப் போய் கொண்டு வாங்கோ.அதை இப்ப அடையாளம் கண்டு பிடிக்க மாட்டினம்.அது வளந்திட்டுதப்பா.


கோழி கொண்டு வந்துவிட்ட கொஞ்ச நாளான பிறகு பிறகு....


இஞ்சாருங்கோப்பா....எங்கட சிவப்பியக் கவனிச்சீங்களே.உந்த வெள்ளடியன் சிவப்பிட்ட இங்க வருமெண்டு பாத்தா சிவப்பிய மெல்ல மெல்ல தன்ர வீட்டையெல்லே கொண்டு போய்ச் சேர்க்குது.ஒருக்கா அவையளிட்ட சொல்லி இஞ்சால கலைச்சுக்கொண்டு வாங்கோப்பா.நல்ல வடிவா வந்திட்டுது.நான் போய்க்கலைக்க என்னை உச்சுக் காட்டுது.இப்பிடியே அங்க பழகிட்டுது எண்டா அங்கயெல்லே முட்டை போடப்போகுது.நானும்
அடை வைக்கவெண்டு கனவு கண்டுகொண்டிருக்கிறன்.

ஓமடியப்பா நானும் கவனிச்சுக்கொண்டுதான் இருக்கிறன்.இப்பெல்லாம் அங்கதான் மினக்கெடுது எடுபட்டுப் போகப்போகுது.எவ்வளவு கஸ்டப்பட்டு சாப்பாடும் போட்டு
வளத்துக்கொண்டு வாறம்.ஆனா ஒண்டு இந்தச் சாட்டில உன்ர கொம்மாவும் கொப்பரும் ஒரு கணக்கு ஒதுக்கிப் போட்டினம் இருக்கட்டும் அவையள்.எனக்குச் செருப்பால குடுக்கவேணும்.என்னையும் கள்ளக்கோழி மாதிரியெல்லே அமுக்கிப் பிடிச்சனியள்.

ஓஓ...பெடிக்கும் கல்யாணம் செய்து குடுக்கப் போறம்.இப்பத்தான் உங்கட செருக்குக் கதை.வாயை மூடிக்கொண்டு கோழியைக்கலைச்சுக்கொண்டு வாருங்கோ முதல்ல.தம்பி அடுத்தமாசமளவில வாறனெண்டு சொன்னவனப்பா போன்ல.நான் சொல்ல மறந்திட்டன்.வந்தா இனி கொழும்புப் பக்கத்துக்கு விடாம இஞ்சனைக்க ஒரு வேலையப் பாத்துக்கொண்டு இருக்கச் சொல்லவேணும்.

எப்ப எடுத்தவன் தம்பி.எப்ப வாறானாம்.உது சரிவராது.இரு பிடிச்சுக்கொண்டு வாறன்.ஆக மிஞ்சிப்போச்சுதெண்டா தம்பி வந்து நிக்கேக்க கையைக் காலை முறிச்சுச் சட்டிக்கதான் வைக்கவேணும்.

இஞ்சப்பா கொதி வரப்பண்ணாதேங்கோ.சும்மா கறி...சட்டி எண்டுகொண்டிருக்காம போய்த் துரத்திக்கொண்டு வாங்கோ.

போய்க் கொஞ்ச நேரத்தில திரும்பி வாறார்....


இஞ்சாரப்பா....அங்க எங்க காணேல்ல சிவப்பியை.வெள்ளடி மட்டும்தான் நிக்குது.
வெங்காயமடி நீ...சொல்லச் சொல்லக் கேக்கேல்ல.அவளவை சட்டிக்க வச்சுப்போட்டாளவைபோல.இப்ப எனக்கும் இல்ல உனக்கும் இல்ல.....

என்னப்பா சொல்றியள்.நானும் 2-3 நாளாக் கவனிக்கேல்லத்தான் நானும்.கோதாரி போக அவளவை.வயிறு அவிஞ்சு கொள்ளையில போக.பாப்பம் இண்டைக்கு பொழுதுபட அடைய வருதோவெண்டு.


கோழி இரவாகியும் வரேல்ல மரத்தில அடைய. .....


அடுத்த நாள்...உந்தக் கோடாலி எங்கயப்பா.உந்த முருங்கை மரத்தை வெட்டிச் சரிக்கிறன்.பாவங்களெண்டுதான் விட்டு வச்சனான்.முழுக்கொப்பும் இஞ்சாலதான் சரிஞ்சு கிடக்கு.அவ்வளவு குப்பையும் நாங்கள் நித்தமும் கூட்டி அள்ளுறம்.அங்கனேக்க ஒண்டிரண்டு முருங்கக்காயைத் தானே நாங்கள் பிடுங்கிறம்.கீரையும் எப்பாலும் ஒடிச்சு எடுக்கிறம்.அவளவை எங்கட முழுக்கோழியையே திண்டு போட்டாளவையே.

சும்மா இரடி லூசி.....என்ன என்ன எங்கட கோழியோ....நல்ல பகிடிதான்.உந்த முருங்கை மரம் மாமரத்தால எங்களுக்கு எவ்வளவு லாபம்.இரவில கோழிகள் 2 அதிலதான் அடையுது.இரவோடஇரவா எவ்வளவு மாங்காயை பிடுங்கி வித்தனி.உதுகளை விட்டு
வச்சிருக்கிறபடியால்தான் எங்கட 2 தென்னைமரத்தை விட்டு வச்சிருக்கிறாள் சுமதி.தேங்காய் அவைன்ர கிணத்துக்கையெல்லே அடிக்கடி விழுது.எத்தனை தரம் சொல்லிப்போட்டு விட்டு வச்சிருக்கிறாள்.கோழியைக் காணேல்லயெண்ட கவலை எனக்கு மட்டும் இல்லையே.


பொறுங்கோ பொறுங்கோ நான் கண்டு பிடிக்கிறன் கள்ளரை.நாசம் விழ அவையளின்ர தலையில.நாளைக்கே போய் சாத்திரம் கேக்கிறன்.

மண்டைக்க சரக்கேதாலும் கிடக்கே உனக்கு.நல்லாப் போய்க் கேளு.எங்கப்பன் கொல்லைல இல்லயெண்டு சொல்ற மாதிரி கள்ளி நீதான் எண்டு சாத்திரி சொல்லும்.
ஏனெண்டா கோழி எங்கடையில்லை.சும்மா கிடவடி.

இல்லையப்பா உவையளை விடப்படாது.கள்ளர்கூட்டம்.பாருங்கோவன் சரியாக் கண்டுபிடிச்சணெண்டா செய்வினை செய்து கையை அழுகப்பண்ணாட்டி நான் ...நான் இல்லை.சொல்லிப்போட்டன்.

எடி விசரி...எப்பிடியடி கண்டு பிடிப்ப.சும்மா புலம்பாதை.எங்களிட்ட தானா வந்த கோழிதானே.விடு.அவளவை கோழி இறக்கையைக்கூட குப்பையோட குப்பையா எரிச்சுக் கொளுத்தியிருப்பாளவை.அவையளை நான் வேற வழியால சரிப்படுத்துறன்.

உந்தக் கோழியின்ர யோசனைல வந்த கடிதத்தையும் மறந்திட்டன்.இந்தாப்பா தம்பியின்ர எழுத்துப்போல கிடக்கு.ஏன் போன் எடுக்காம கடிதம் போட்டிருக்கிறான்.

அதப்பா நான் அண்டைக்க்குக் கதைக்கேக்க இப்ப கிட்டடியில எடுத்த
போட்டோவொண்டு அனுப்பச் சொல்லிக் கேட்டனான்.அதாத்தான் இருக்கும்.இஞ்ச தாங்கோ.

அன்புள்ள அம்மாவுக்கு சுகம் சுகம்தானே.இன்னும் இரண்டு கிழமைல வாறன் உங்க.அம்மா அப்பா கொழும்பில இருந்து என்ன வாங்கிக்கொண்டு வரவேணும் நான்.சொல்லுங்கோ.கொண்டு வாறன். நானும் சாமான்கள் வாங்கி வச்சிருக்கிறன்.
அப்பாவுக்கு ஒரு போனும்கூட.அம்மாவுக்கு கிரண்டரும் புது மொடல்ல.

அம்மா உங்களிட்ட நான் ஒண்டு சொல்லவேணும்.அம்மா நீங்கள் எனக்குக் கல்யாணம் பேசவெண்டு சொன்னியள்.நான் சொல்லப்போறதைக் கேட்டு கொஞ்சம் மனவருத்தம் உங்களுக்கு வரலாம்.அம்மா நான் இங்க ஒரு பிள்ளையக் காதலிக்கிறன் கொஞ்சக் காலமா.அவளைத்தான் கல்யாணம் செய்யவெண்டு சத்தியம் பண்ணிப்போட்டன்.நான் வரேக்க கூட்டிக்கொண்டு வாறன்.நல்ல வடிவாயிருப்பளம்மா.பழகிப் பாத்திங்களெண்டா உங்களுக்கும் பிடிக்கும் அவளை.திடீரெண்டு கூட்டிக்கொண்டு வந்தா உங்களுக்கு அதிர்ச்சியாப்போடும் எண்டுதான் இப்பவே சொல்றன்.ஒண்டுக்கும் யோசிக்காதேங்கோ.

சரியாப்போச்சு....தலையில இடி விழுகிறமாதிரி உவன் என்ன எழுதிருக்கிறான் எண்டு பாருங்கோப்பா.வீடு வாசல் நகை நட்டெண்டு நான் நல்ல சீதனத்தோட இஞ்ச கல்யாணம் பேசிக்கோண்டு தரகர்மாருக்கும் அள்ளிக்குடுத்துக்கொண்டு திரியிறன்.
நாசமா போறன் எண்டு உந்தப் பெடி என்ன சொல்லுதெண்டு.

உதுக்குத்தான் சொன்னனான் கொழும்புப் பக்கம் அனுப்பாதயெண்டு.உனக்கு எல்லாத்திலயும் பேராசை.நல்ல சம்பளம் நல்ல வேலையெண்டு ஒற்றைக்காலில அவனோட ஒத்துப்பாடிக்கொண்டு அனுப்பின.அனுபவி.உதுக்கு நான் என்ன சொல்லக் கிடக்கு. எவளைக் கூட்டிக்கொண்டு வாறானோ.பாத்தியே நீ கள்ளக் கோழி அமத்திப் பிடிச்ச.எங்கட பெடியை யாரோ அமத்திப்போட்டாளவ.சரி கோழி துலைஞ்சமாதிரி திரும்பி எங்களிட்டயாவது வாறானே.அதுவே போதும் சந்தோஷம்.விடு.


அடுத்த பதினைஞ்சு நாள் போக...


தம்பி இண்டைகெல்லேப்பா வாறனெண்டவன்.சரி அவனுக்குப் பிடிச்சதாச் சமை.இப்ப என்ன அவன் அவளாரோ ஒருத்தியையும் கூட்டிக்கொண்டுவாறான்.கதைச்சுப் பாப்பம்.புலம்பாமச் சமை அவன் வந்திடுவான்.மெல்ல மெல்ல மாத்திப்போடலாம் அவனை.


சமையல் நடந்துகொண்டிக்கும்போதே ஒரு ஆட்டோ வந்து நிக்குது.....


இஞ்சப்பா தம்பி வந்திட்டான் போல.இந்த அடுப்பை பாத்துக்கொளுங்கோ.சீலையச் சுத்துக்கொண்டு ஓடி வாறன்.சொன்னதைவிட நேரத்துக்கு வந்திடான்போல.வீட்டுக்குள்ள கூட்டிக்கொண்டு வாங்கோ.உங்க பக்கமெல்லாம் விடுப்புப் பாக்கும் சனம்.

ஆட்டோவிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுடன் மகன் தன் ஒன்றரை வயதுக் குழந்தையோடு வந்து இறங்குகிறான்.வந்த மகனோடு பேசிச் சண்டை பிடிச்சுக்கொண்டிருக்கேக்க சிவப்பியும் 6 குஞ்சுகளோட வேலி நுழைஞ்சு வளவுக்குள்ள வந்துகொண்டிருக்குது.

ஏதோ என்னால.....இவ்வளவுதான் நகைச்சுவை முடியுது !

கதையின் சுருக்கம்....

புதுசாய் ஒரு கோழி எப்பவும் எங்கள் வீட்டில உலவுது.ஒரு கிழமைக்குப் பிறகு வீட்டுக்காரம்மா சொல்றா கோழியொன்று புதுசா எங்கள் கோழிகளோடு உலவுது.இடம் பெயர்ந்தவர்களின் கோழியாக இருக்கலாம்.இன்னும் 2-3 நாள் பார்த்துவிட்டு எங்கள் அம்மா வீட்டில் கொண்டு போய்விட்டு வருவோம். வளர்ந்தபிறகு கொண்டுவரலாம்.பக்கத்துவீட்ல நல்ல இனச் சேவல் ஒன்று நிற்குது.அதன் பரம்பரை எங்கள் வீட்லயும் வேணும்.பக்கத்துவீட்டுக்காரம்மா அவங்க வீட்ல ஒரு முட்டை அடை வைக்கக் கேட்டுக் குடுக்கல.அதனால இந்தக் கோழியோடு இணைந்தால்....கற்பனை.வீட்டுக்காரர் அடிச்சுச் சமைக்க நினைக்கிறார்.அவ இல்லைன்னு அவங்க அம்மா வீட்ல கொண்டு விட்டு 2 மாசம் கழிச்சு கொண்டு வந்து விடறா.

சேவல் இங்க வரும்ன்னு பாத்தா சிவப்பிதான் அங்க போய் எப்பவும் நிக்குது.திடீர்ன்னு ஒருநாள் சிவப்பியைக் காணோம்.ஊர்ல எங்க வீட்டு மரம் அடுத்தவீட்ல தலை நீட்டினா....சண்டைதானே.கோழி தொலஞ்சதில சின்னதா அதிலயும் குழப்பம்.முருங்கை மரம் மாமரம் இவங்கவீட்ல தலை நீட்டுது.இவங்க அதில களவாயும் தெரிஞ்சும் பயன் எடுத்துக்கிறாங்க.இவங்க தென்னை மரம் அவங்க கிணத்தை அசுத்தப்படுத்துது.

கோழியை அவங்கதான் பிடிச்சு சமைச்சிருப்பாங்கன்னு சந்தேகப்பட்டு இந்தப் பக்கம் வரும் கொப்புகளை வெட்ட வெளிக்கிட்டு அப்புறம் தென்னை மரத்தை நினைச்சிட்டு விட்டு வைக்கிறாங்க.சாத்திரம் கேட்க நினைச்சிட்டுப் போகல.காரணம் சாத்திரி இவங்க்ளையே கள்ளர்ன்னு சொல்லிடுவார்ன்னு பயம்.

இப்பிடியிருக்கும்போது கொழும்பிலிருக்கும் மகன் தான் ஒரு பெண்னைக் காதலிப்பதயும் கூட்டிக்கொண்டு வந்து காட்டிப் பெற்றோர்களிடம் ஆலோசனை கேட்கப்போவதாயும் திடீரென்று வந்தால் அதிர்ந்துபோவார்கள் என்று போனிலயும் சொல்லமுடியாமல் கடிதம் போட்டிருக்கார்.

திட்டிக்கொண்டாலும் மகனின் வரவை எதிர்பார்த்திருக்கார்கள்.மகனும் வந்தார்.ஒரு வெள்ளைக்காரப்பெண் ஒரு குழந்தையுடனும்.அதே நேரம் சிவப்பியும் 6 குஞ்சுகளோடு வளவுக்குள் நுழைகிறது.கிராமப் பக்கங்களில் பற்றைகளுக்குள் கோழிகள் அடை காத்துக் குஞ்சுகளோடு வருவதுண்டு.அந்த 21 நாட்களும் சில வீடுகளில் சந்தேகத்தால் பக்கது வீட்டிக் காரர்களோடு பெரிய சண்டையே நடக்கும்.கொஞ்சம் நகைச்சுவையோடு சொல்ல முயற்சித்திருக்கிறேன்.சரியோ.......யோயோயோயோயோ !


ஹேமா(சுவிஸ்)

Thursday, June 23, 2011

மனப்பிறழ்வு...

பிடிப்பில்லை
பொறுப்பில்லை
வெறுப்பைக்
குத்தகைக்கு எடுத்திருப்பதாய்
குற்றச்சாட்டுகள் நீட்டமாய் !

சிலுவை இரத்தம்
தேடும் மனிதர்களாய்
ஒற்றைக் கன்னத்துக் கண்டலோடு
நேர்மையாய்
மறுகன்னம் காட்டினாலும்
கை நீட்டி
அடிக்க முனையும் இவர்கள் !

பொய் சொல்லி
கழுத்தறுத்து
சூதின் நாக்குகளைச் சுழற்றியபடியே
வெள்ளாடுகளை
வெட்டியும் தின்றும்
குருதிக் குளியளில்
ஆவி பிடித்தும்
ஒன்றை இரண்டாக்கியும்
நாலைத் துண்டாக்கியும் தின்னும்
மானிட மிருகங்களாய் இவர்கள் !

கவனியுங்கள்.....
கரு நுழைந்து
கொஞ்சும் குழந்தையின்
பிஞ்சு விரல் பிடித்து விளையாடும்
கடவுளாய் நான்!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, June 22, 2011

மரத்த மனிதன்...

கட்டை வண்டி
கட்டையால் காலணி
மனிதர்கள் காலமிருந்தே
நானறிவேன் உலகை
பேச வையுங்களேன் என்னை
பழங்கதைகள் சொல்வேன்.

முளை கட்டினேன்
எச்சத்தில்தான்
ஒதுங்கிய பறவைகளும்
மனிதர்களும்
எனக்குள் எண்ணில் இல்லை
இப்போ மண்ணிலும் இல்லை.

வயது ஏறி
வைரமாய் இறுகினாலும்
பயத்தால் வெறுத்து
வேர்களின் கேள்விகளும்
இறுக்கிய விழுதுகளுமாய்
வயதை எண்ணியே
நாட்கள் கழிந்தபடி.

மரத்த மனிதன்
இற்று இறந்த மனிதம்
கட்டிடக் காட்டுக்குள்ளேயே
கழிவிறக்கும் வேடுவன்
வானைத் தோண்டி
மண்ணைத் துளைத்து
மருந்தில் உயிர் வாழ்பவன்.
காற்றெங்கும் நஞ்சு
பயமாயிருக்கிறது
சுவாசிக்ககூட.

தற்காலிகமாவோ
நிரந்தரமாகவோ
என்னை நகர்த்தி
இடம் பெயரப் பார்க்கிறேன்
முடியவில்லை.

திரும்பி வரமுடியாத
பிரதேசம் ஒன்றானாலும்
நான் வாழமுடியாத தேசமாலும்
தங்கப்போகிறேன்
வரலாம் அங்கும் என்னைத் தகர்க்க.

மனிதனின் அக்கிரமத்தால்
பாரமாயிருக்கின்றன
இலைகள் கூட இப்போ!!!



ஹேமா(சுவிஸ்)

Tuesday, June 21, 2011

காதலின் கருப்பிக்கு...



அன்பின் கருப்பிக்கு....

"வெறும் நட்பல்ல இந்த உறவெல்லாம் என்று பலமுறை நினைத்திருக்கிறேன்...!"

நினைவிருக்கிறதா இந்த சொற்றொடர் ?கொஞ்ச வருடத்திற்கு முன்னால் நீ எனக்கு அனுப்பியிருந்த முதல் மின்னஞ்சலில் இப்படி எழுதியிருந்தாய்.

இத்தனை காலத்தில் தோழியாய் காதலியாய் மனைவியாய்.... எத்தனை பதவிகளை அடைந்து விட்டாய்!நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது.நாம் எப்படி அறிமுகமானோம் என்பது நினைவில் இல்லை.உனக்கு நினைவிருக்கிறதா? இருந்தால் பகிர்ந்துக்கொள்.

31.05.00 அன்று எனக்கு முதல் மின்னஞ்சல் அனுப்பியிருந்தாய்.நாம் பழகிய ஆண்டுகள் நிறைவானதைக் கொண்டாடும் வகையில் 31.05.00 அன்று அத்தனை நிகழ்வுகளையும் நினைவு படுத்தி காதோரம் பேசி மகிழ வேண்டுமென்று கடந்த பல நாட்களாய் திட்டமிட்டிருந்தேன்....ஆனால் அன்றைய தினம் வேலை மிகுதியால் முடியாமல் போய்விட்டது.

31.05.00 அன்றைய தினத்தைப் பற்றி என்றாவது நீ சிந்தித்துப் பார்த்திருக்கிறாயா? இருக்காது.அன்றிலிந்து உனக்கு எவ்வளவு அறிவுரைச் சொல்லியிருப்பேன்.உனக்கு ஈழமக்களைப் பற்றி எண்ணியே நேரமும் வாழ்வும் கரைந்துப் போய்க்கொண்டிருக்கிறது. தனக்கான வாழ்வும் வேண்டும் என்பதில் அக்கறையே சிறிதுமில்லை உனக்கு. ஒருவேளை இப்போதே ஈழம் சுதந்திரம் அடைந்துவிட்டால் அதை அனுபவிக்க "ஈழமண்ணில்" உன் வாரிசு ஒன்று வேண்டாமா? அல்லது ஈழச்சுதந்திரம் நாள் தள்ளிப் போவதென்றால் ஈழத்துக்காகப் போராட உன் வாரிசு ஒன்று வேண்டாமா ?

ஒரு விடயத்தை உனக்குத் தெளிவு படுத்த விரும்புகிறேன்.உன் தனிப்பட்ட விருப்பங்களை உலகில் எந்த ஆணாலும் நிவர்த்திக்க முடியாது.இதுவரை உலகில் அப்படி ஒருவன் தோன்றவேயில்லை.இனிமேலும் தோன்றப்போவதுமில்லை.

உண்மையில் ஈழத்தை நீ நேசிப்பவள் என்றால் மழலைகளைப் பெற்றெடு.எனக்கும் கொடு.அப்போதுதான் ஈழத்துக்காக நீ செய்ய விரும்பும் தியாகம் நிறைவேறும்.

எப்பொழுது உனக்கு ஓய்வு (விடுப்பு) நாள் என தெரியப்படுத்து.இன்னும் பேசலாம் காதோரம் நிறைய.

உன் அன்பு வீரன்.
என் தோள் தொட்டணைத்த என் வீரனுக்கு.....
சுகம் சுகம்தானே.நித்தமும் காதோரம் சுகம் கேட்டாலும் கடிதம் என்பதின் சடங்கு சுகம் கேட்பது !

ஈழம் என் முதல் காதலன்.நீங்கள் என் கணவர்.உங்களை வணங்குகிறேன்.ஈழத்தைப் பூஜிக்கிறேன்.உயிர் உங்களிடம்.மூச்சு தாய்மண்ணிடம்.உங்களின் ஆசைகள் பற்றிக் கதைத்தால் வாதங்கள் பிடிவாதங்களுக்குள் திணறும்.வேண்டாம்.சில நினைவுகளை மீட்டெடுத்து உங்கள் காதில் மீட்டவா இன்று !

அன்றைய தீபத் திருநாள் ஞாபகமிருக்கிறதா.அகல்விளக்கு நிரைகளில் ஒற்றை விளக்கின் திரிதூண்ட நான் குனிய என் முகத்தடியில் திரண்டு கருத்த வைரமென உங்கள் பாதம் பூமி நிரப்ப நிமிர்ந்த என் கண்ணுக்குள் தந்தம் கடைந்த அற்புத உருவம் மயக்கமாய்.அன்றைக்குப் பிறகு இன்னும் சுயமாய் நானில்லை !

பின்னொருநாளில் சொல்லியிருந்தேன்.மங்கிய மாலையில் முகர்ந்து பார்க்க மஞ்சள் பூக்களை நிறையவே பிடிக்குமென்று.மறக்காத நீங்கள் கைகள் அள்ளிய சிவப்பும் மஞ்சளுமாய் கொட்டாத மகரந்தத்தோடு முந்தானை விலக்கி மூச்சு முட்ட முட்ட முழுவதுமாய் தலை தொட்டுப் பாதம்வரை மகரந்தப் பொடி தடவி...முங்கி எழ வைத்து இன்னும் தரவா என்றீர்கள் இருபொருள்பட.இல்லை....இன்றிலிருந்து மஞ்சள் மாதுளம் பூக்களை விரும்பப்போவதில்லை.என் உடல் நனைக்குமளவிற்கு பூக்களைப் பறித்தால் பழங்களை அழித்த பாவியாகிவிடுவேன் என்றேன்.அடி போடி மஞ்சள் இதழ்கள் மரத்திலிருப்பதைவிட உன் மார்பிலிருப்பதே அழகென்றீர்கள்.உதடு பிதுக்கி அழகு காட்ட அங்குமொரு ஒற்றை இதழ் செருகி முள்ளில்லா மாதுளை மரமொன்றில் மூவிதழ் பூவொன்று... பாட்டும்பாட... முழித்தேன்.....சிரித்தீர்கள் !

இன்னுமொன்று.....

கைகாட்டி வேம்பும் ஞான வைரவரும் ஒளித்திருந்து பார்க்க இறுக்கிய முத்தத்தில் காற்றடிக்க வேம்பின் கிளையும் ஒடிந்து பக்கம் விழ வேப்பம்பூவின் வாசனையோடு உங்கள் தோள் சரிந்திருந்தேன்.மெலிதாய்க் கேட்டீர்கள் பிடிக்கிறதாவென்று.ம்.... என்றேன்...சரிதான் மற்றுமொரு இரவில் பரப்பிய வேப்பம்பூப் படுக்கையில் பூக்களோடு என்னையும் சேர்த்துக்கொண்டே இப்போதும் பிடிக்கிறதாவெனக் கேட்க...அப்போதும் முழித்தேன் அள்ளியெடுத்து அணைத்தபடி "கள்ளி என்னையும்தான் கேட்டேனடி..." என்றீர்கள்.பூக்களோடு உங்களையும் பிடிக்குமென்று இன்றுவரை சொல்லவேயில்லை நான்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, June 20, 2011

நட்சத்திர வாரம்...

வணக்கம் வணக்கம் தமிழ்மணத்திற்கும் சுற்றி வரும் நட்பின் வட்டங்களுக்கும்.
இன்றுமுதல் தமிழ்மண நட்சத்திரமென்றார்கள்.என்னைப்பற்றியும் சொல்லச் சொன்னார்கள்.நான் யார்.உண்மையில் தடுமாறித்தான் நிற்கிறேன்.ஈழம் என் தேசமென்றார்கள்.நானோ சுவிஸ்ல் அகதித் தமிழிச்சியாய் அடிமைப்படாமல் சுதந்திரமாய் ஆனால் எல்லாம் இருப்பவளாயும் அதேசமயம் எதுவுமே இல்லாதவளாயும்.

அறிமுகமென்று ஒருமுகம் எனக்கில்லை.நான் ஹேமவதி.ஈழத்தமிழச்சி.சுவிஸ்ல் 13 வருடகாலமாக அகதியாய் வாழ்கிறேன்.உயிர்காக்க என்னை மாற்றி.......வாழ்கையையே மாற்றிவிட்டார்கள் பெற்றவர்கள்.ஆரம்பகாலத்தில் இலண்டன் ஐபிசி வானொலிக்காக ஹேமா(சுவிஸ்) என்று எழுதத் தொடங்கி மனதில் பட்டதை இன்றுவரை மனச்சுத்தியுடன் பொய்யற்று எழுதிக்கொண்டிருக்கிறேன்.என் மனம் அமைதியடைகிறது.அல்லது எவரையோ அமைதிப்படுத்துகிறது.நேர்மையான விமர்சனங்களால் ஊக்கப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நண்பர்களால் இன்னும் கைபிடித்து அழைத்துச் செல்லும் குழந்தை நிலா.உப்புமடச்சந்தி என் தளங்கள்.

என் ஊரின் சந்தி பெயர்தான் உப்புமடச்சந்தி.இன்றும் நான் அளைந்த புழுதி எனக்காகக் காத்திருப்பதாக அப்பா சொல்கிறார்.புழுதிக்கும் போருக்கும் பயந்து ஓடி வந்த கோழை நான்.என் தேசத்து உண்மைகள் போல அநாதை நான் இப்போ.ஆதரவற்றதெல்லாம் அநாதைதான்.அந்த வகையில் என் தேசத்து உண்மைகளும் நானும்.

4 வருடங்களாக கொஞ்சம் ஏதோ எழுதுகிறேன்.ஆரம்ப எழுத்துக்களை விட இன்றைய எழுத்துக்கள் வளர்ந்து ஓரளவு நிறைவைத் தருவது போலவும் உணர்கிறேன்.என் வீட்டில் யாரும் எழுத்தாளர்கள் இல்லை.அப்பா ஒரு பாடசாலை அதிபர்.நிறையவே வாசிப்பின் பக்கம் இருப்பவர்.அவரின் பழக்கம் மட்டும் என்னிடமிருக்கிறது.பெரிதாக என்னை ஊக்கப்படுத்த யாருமில்லை.அப்பா கொஞ்சம் ரசித்து விமர்சிப்பார்.மற்றவர்கள் பார்ப்பார்கள்.
ம்ம்...நல்லாயிருக்கு என்பார்கள்.அவ்வளவுதான்.

சுற்றியிருக்கும் நண்பர்கள்தான் என்னை வளர்ப்பவர்கள்.மனதின் உணர்வுகளை வெளியில் கொட்ட நினைக்கிறேன்.இதில் புதுக்கவிதை மரபுக்கவிதை இலக்கியம் எதுகை மோனை தாண்டி கண்ணில் பேச்சில் தெறிக்கும் என் ஆவேசத்தை எழுத நினைக்கிறேன்.சில கவிதைகளுக்கு என் நண்பர்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டு என் ஆத்மாவைச் சந்தோஷப்பட வைக்கும்.அதேபோல அவர்கள் காட்டும் திருத்தங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் என்னிடமுண்டு.

என் கவிதைகளின் கருவும் பொருளும் நானேதான்.என் மண்ணும் அங்கு கை விட்டுப்போன வாழ்வுமே என்னை எழுத வைக்கும் கருவிகள்.என் சில எழுத்துக்களை ஆவணப் பதிப்புக்களாகவே நான் நினைக்கிறேன்.நாம் ஏன் துரத்தப்பட்டோம்.ஏன் அகதித் தமிழரானோம்.என்ன கேட்டோம்.எதைக் கேட்கிறோம்.ஏன் உயிரோடு கொல்லப்பட்டோம் ஏன் மூச்சோடு புதைக்கப்பட்டோம்.இது போன்ற சின்னச் சின்னக் கேள்விகளால் நிறைந்த கேள்விகள் நிறைந்த ஈழத்தமிழன் வாழ்வை நம் எதிர்காலமும் தெரிந்துகொள்ள ஒரு சின்னத் தளம்.என் மண்ணில்தான் என் சுவாசம்.மண்ணைத்தான் காதலிக்கிறேன்.நேசிக்கிறேன்.

மண்ணோடு வாழ்வும் வானோடு அகதிவாழ்வும்தான் வாத்தியார் எனக்கு !தாய் மண்...

கவிகள் காவி வரும் காற்றே
கனத்த மனங்களையும் சுமந்து செல்
ஒரு கணம் என் தாய் தேசம்
என் தாய் கண்டு பதில் கொண்டு வா.

என்னை அகதியாய்
தொலைத்துவிட்டு கலைத்துவிட்டு
கவலையோடு தனிமையாய்
என் தாயவள் ஈழத்தில்
அம்மா...அம்மா
உன்னையும் என் மண்ணையும் பிரிந்து
ஏதிலியாய் நான் இங்கு.
உன் மடி தாங்குமா
இன்னும் ஒரு முறை என்னை.

சுட்ட பிணம் பாதியில்
விட்டெழும்பித் திரிவதாய் ஒரு வாழ்வு.
அளைந்து விளையாடிய மண்
அலசித் தலை கழுவி விடுவாயா
சுவாசித்த தாய் மண்ணும்
சுவாசம் தந்த உன்னையும்
தவறவிட்ட குழந்தையாய் நான்.

நிலவின் வெளிச்சத்தில்
மணல் கும்பலில் விளையாடியிருக்க
மொட்டவிழ்ந்த மல்லிகை மாலை சூட்டி
அழகு பார்த்த காலங்களை
கவர்ந்த கள்வர் யார் அம்மா.
பள்ளியால் திரும்பும் என்னை
அள்ளியெடுத்துக்
காக்கைக்கும் குருவிக்கும்
அணிலுக்கும் எனக்குமாய்
பாட்டிக் கதையோடு பராக்குக் காட்டி
உணவு ஊட்டிய
கணத்தைப் பறித்தவர் யார் அம்மா.

நித்தமும் சுற்றியெரியும்
நெருப்பும் கொலையும் கூக்குரலும்
ஞாபகப் படுத்துகிறது
நீ சொன்ன பழைய ராஜாக்கள் கதையை.
இசையும் இன்பமுமாய்
எப்படித்தான் வாழ்ந்தாலும்
அம்மா உன் பாத(ச)ம் தேடியே
மனம் அலைந்த படி
களைத்த கண்களுக்குள்
அகதித் தூக்கம் வரும் வரை.

என்றோ ஒரு நாள் மீண்டும் உன் மடி மீது
என் மண்ணின் புது மணத்தோடு புரண்டு எழும்பி
பனங்கிழங்கும் பனாட்டு ரொட்டியும் பங்கிட்டு
கிணற்றுக் கட்டுக்குள் கால் தொங்க
தங்கமணி அக்காவோடு
கதை பேச வேணும் அம்மா.

ஏதோ ஒரு தேசத்தில் என் உயிர் பிரியுமுன்
ஒரே ஒரு முறை உன்னையும்
என் மண்ணையும்
எனக்குள் நிறைவாய் நிறைத்துக் கொள்ள
எப்போது...எப்போது...அம்மா எப்போது !!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, June 18, 2011

நிலாக் கவிதைகள்...

"கார்ட்டூன் பார்த்தது போதும்"
பதுங்கிக்கொண்டாள் சத்தம் கேட்டு
போர்வைக்குள் நிலா.

சுவரில் மாட்டியிருக்கும்
மூன்று குழந்தைகளும்
அவளும் இப்போ தனித்தில்லை
நிரப்புகிறாள் இருட்டறையை
காப்பகத்துச் சினேகிதர்களின்
பெயர்களாலேயே.

அம்மாவாய் அக்காவாய்
தங்கையாய் மாறியவள்
கதை சொல்லி
அழத் தொடங்குகிறாள்
விம்மி விம்மி.

ஓ...
கார்ட்டூனில் இறந்த குஞ்சுப் பறவை
வேறென்ன செய்ய முடியும் அவளால்
ஒரு அம்மாவாய்
ஒரு பெண்ணாய்!!!
நீலச் சிங்கம்
சிவப்பு பூனை
பச்சை நாய்
வெள்ளைப் பாம்பு
குளிக்க வச்சு
உடுப்புப் போட்டு
சாப்பாடு கொடுத்து
களைத்துவிட்டாள் நிலா.

டோரா பொம்மைக்கு
பயம் காட்டிச்
சோறு கொடுப்பதே
பெரும் கலை அவளுக்கு.

அவளுக்குப் பயம் காட்டிச்
சோறு கொடுக்க
காக்காவைக் காணவில்லை
பூச்சாண்டிக்குப் பயமுமில்லை
நிலவில் பாட்டியுமில்லை!!!


ஹேமா(சுவிஸ்)

Tuesday, June 14, 2011

மினுக்கெட்டிக் காதல்

சில சேமிப்புக்கள் உனக்காக...
சாதகப் பறவையின் இசை
அசையும் மேகத்தின்
அழகு
பலகனியின் பூக்கும்
ஊதாநிற ஓர்குட்
எனக்கு மட்டும் புரிகிறமாதிரி
கிளிஞ்சலால் ஒட்டிய
உன் முகம்
சில பாடல்கள்
கார் கண்ணாடியின் பின்புறத்தில்
உன் போட்டோ
உனக்காக மாற்றிய
சில உணவுகள்
பனிப்புகாரில் எழுதிய
உன் பெயர்
உருட்டிய ஐஸ் மனிதனில்
உன் உருவம்
துயிலெழுப்பும்
சூரியக் கதிர்
அத்தனையிலும் சேமித்த
உன்னை...
எனக்குள் சேமிக்க....!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, June 10, 2011

போதனை...

அவைகளுக்கு அது பெரும்பணி
நுனித் தலையில் சும்மாடு
எதையோ தேடியபடி
வரிசை கலையாமல் லாவகமாய்
ஒன்றையொன்று இடிபடாமல்
ஒற்றுமையாய் இடம்விட்டு
தேவைகளை நிரப்ப
உயர உயர
உச்சியொன்றைப் பிடிப்பதற்காக
ஊர்ந்துகொண்டிருக்கிறன அவைகள்.

ஒன்று கொஞ்சம்
திரும்பிப் பார்த்தாலே போதும்
விழவும்
வரிசை சீர்கலையவும்.

காத்திருக்கிறேன் பிரமிப்புடன்
என் வாசிப்பை ஒத்திவைத்தபடி.
அடையாளத்திற்காக
கவிழ்த்து வைத்த புத்தகச் சரிவில்தான்
அவர்களின் பயணம்.

இது இடப்பெயர்வா
இல்லை
தமக்கான ஏதோ ஒன்றின்
தேடுதலுக்கான ஒன்றிணைவா.

ஓசையே இல்லாமல்
ஐந்தறிவு சொல்லி நடக்கிறது
ஆறறிவுக்கு ஏதோ ஒன்றை!!!


ஹேமா(சுவிஸ்)

Friday, June 03, 2011

குயிலா...

பிசறிக் களைத்த மனம்
உணர்வுகளைத் தொலைத்த கனம்
சாணைபிடிக்கா நகம்
திணறும் அழகு
உதறி உதறி ஆடை விலக்கி
நடையோ நளினம்
இலந்தமரக்குயிலுக்கு
எதிர்க்குரல் விடும் குயிலா.

தூக்கிய ஒற்றைப்பாவாடை
கிணற்றுக் கட்டில்
உள்தொங்கிய கால்கள்
பறக்கும் முடி
நைந்துவிட்ட றவுக்கை
குளிக்காத தேகம்
அவளே இளவரசி.

பரிகசிக்கும் பலர்
பாவப்படும் சிலர்
காற்றுக்கும் காமப்பசி
தூக்கிப் பறக்கும் ஆடை
தன்னை மறந்த குயிலா
குயிலுக்குக் குரல் கொடுத்தபடி!!!

ஹேமா(சுவிஸ்)